தமிழ்க் குன்றம் - தமிழ் இலக்கண நூல்

ஒற்றுப்பிழைகள் ஏற்படாமல் தமிழ் மொழியைக் கையாளுவதற்குப் பேராசிரியர் பி.விருத்தாசலனார் தமிழ்க் குன்றம் என்னும் நூலை உருவாக்கியுள்ளார்கள். அந்நூலில் கூறப்பட்டுள்ள நூற்பாக்களோடு விளக்கங்களையும் தொடர்ந்து  எழுதலாம் என்று எண்ணுகிறேன்.


வேற்றுமை அல்வழிப் புணர்ச்சிகள்
வேற்றுமை ஐம்முதல் ஆறாம் ; அல்வழி
தொழில்பண் புவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளி  ஈரெச்சம் முற்று இடையுரி
தழுவுதொட ரடுக்கென வீரேழே (நன்னூல் - 152)

வேற்றுமைப் புணர்ச்சியாவது ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை உருபுகள் ஆறும் மறைந்தும், வெளிப்பட்டும் வரச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் புணர்ச்சியாம்.

1. நிலம் கடந்தான் - இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ உருபு தொக்கது
   நிலத்தைக் கடந்தான் என்பது விரி.

2. கல்லெரிந்தான் - மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல் உருபு தொக்கது
     கல்லால் எறிந்தான் என்பது விரி

3. கொற்றன் மகன் - நான்காம் வேற்றுமை உருபாகிய கு உருபு தொக்கது
    கொற்றனுக்கு மகன் என்பது விரி

4. மலைவீழருவி - ஐந்தாம் வேற்றுமை உருபாகிய இன் உருபு  தொக்கது
    மலையின் வீழருவி என்பது விரி

5. சாத்தன் கை - ஆறாம் வேற்றுமை உருபாகிய அது உருபு தொக்கது.
    சாத்தனதுகை என்பது விரி

6. குன்றக்கூகை - ஏழாம் வேற்றுமை உருபாகிய கண் உருபு தொக்கது
    குன்றத்தின் கண் கூகை என்பது விரி.

அல்வழிப் புணர்ச்சி

அல்வழிப் புணர்ச்சியாவது வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்னும் ஐந்து தொகை நிலையும் எழுவாய், விளி, பெயரெச்சம், வினையெச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, இடைச்சொல், உரிச்சொல், அடுக்குத்தொடர் என்னும்  ஒன்பது தொகாநிலையும் ஆகிய பதினான்கும் வருமொழியோடு புணரும் புணர்ச்சியாம்
எ.கா.
1. கொல்யானை - வினைத்தொகை
2. கருங்குதிரை - பண்புத்தொகை
3. சாரைப்பாம்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. மதிமுகம் - உவமைத் தொகை
5. இராப்பகல் - உம்மைத்தொகை
6. பொற்றொடி - அன்மொழித்தொகை
7. யானை சென்றது - எழுவாய்த்தொடர்
8. சாத்தா செல் - விளித்தொடர்
9. வந்த சாத்தன் - பெயர்ச்சத்தொடர்
10. வந்து போனான் - வினையெச்சத்தொடர்
11. வந்தான் சாத்தன் - தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
12. பெரிய சாத்தன் - குறிப்பு வினைமுற்றுத் தொடர்
13. மற்றொன்று - இடைச்சொற்றொடர்
14. நனிபேதை - உரிச்சொற்றொடர்
15. பாம்பு பாம்பு - அடுக்குத் தொடர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்