அரசியலில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்


.

பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று

எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்

வீட்டுகுள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்!

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே

பெண் இளைப்பில்லை காண் (பாரதியார்)



பெண் தனக்கான வெளியில் சுதந்திரமாக சுற்றித்திருந்த காலம் மாறி, நிலவுடைமை சமூகத்தில் அவளுக்கான புழங்கு வெளி ஆணால் வரையறுக்கப்பட்டு , மொழி வழி பதிவு செய்யப்பட்டது. பின்னால் அதுவே பெண்ணுக்கான விதியாக நிலைபெற்றது. ஆண் / பெண் என்னும் எதிர்வுகளின் பேதம் இயற்கையின் படைப்பு அதனைச் சமன்படுத்துவது இயலாத காரியமெனப் பொதுபுத்திக்கு உரைக்கப்பட்டது. இதனால் ஆண் வெளி சமூகமாகவும், பெண் வெளி சமையல் அறையாகவும் கட்டமைக்கப்பட்டது. இக் கருத்தியல் தொடர்பான விவாதங்கள் பைய பைய 19 நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்டு பெண்ணியம் என்னும் கோட்பாட்டை உருவாக்கி 20 ஆம் நூற்றாண்டில் மிதவாதம், போராட்ட குணம், தீவிர வாதம், புரட்சிகரம், சமதர்மம் பெண்ணியமென வளரத்தொடங்கியது. இதன் பயனாக பெண் சமூகவெளியில் சில சட்டகங்களை உருவாக்கி கொண்டு உலவத் தொடங்குகின்றாள். இச் சட்டகங்களின் மூலமாக அவள் எக்காலத்திலும் யாரையும் சார்ந்திருக்கவேண்டிய தேவை இல்லாமலும் தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்திச் செய்து கொள்ளக் கூடியவளகாவும் சமூகம் குடும்பம் இருநிலையிலும் திறம்பட செயலாற்றுகின்றாள். பெண்கள் சமூக தளத்தில் சீர்திருத்த செவ்வியர்களாகவும், விடுதலைப்போராட்ட மறத்தியராகவும், படைப்புச் சிற்பிகளாகவும், அரசியல் முன்னோடிகளாகவும் திகழ்ந்துள்ளனர். அவற்றுள் சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் அரசியலில் ஈடுபட்ட அன்னை சத்தியவாணி முத்து, சரசுவதி சுப்பையா, திருமதி பார்வதி கிருஷ்ணன், இரமணி நல்லதம்பி, லீலாவதி ஆகியோர் குறித்த உரையாடலாக இக்கட்டுரை அமைகின்றது.



அன்னை சத்தியவாணி முத்து


ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தோன்றி தம் உள்ளத்துணிவாலும், ஊக்கத்தாலும் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் பெரியாரின் இயக்கத்தில் இணைந்து இந்தி எதிப்பு போரில் கலந்துகொண்டவர் சத்தியவாணி முத்து அம்மையார். தி.மு.க முதன்முறையாகச் சட்டமன்றத்தில் நுழைந்த போது பதினைந்து பேரில் இவர் ஒருவரே பெண் உறுப்பினர் என்னும் சிறப்பும் தி.மு.க.வில் மகளிர் மன்றம் தொடங்கியவர், பெண்ணகளுக்கு பெண்களால் அரசியல் சார்ந்த முதல் பத்திரிக்கையை கொண்டு வந்த பெருமை எனப் பல சிறப்புகள் இவருக்குண்டு . இவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோரிடம் பயிற்சிபெற்றவர். 1944 முதல் 1949 வரை, திராவிட முன்னேற்றக் கழகம் பிறக்கும் வரை, திராவிடர் கழகத்தின் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். பின்பு அதன் செயற்குழு உறுப்பினராகவும் பொதுக்குழு உறுப்பினராகவும் மகளிர் அணித்தலைவியாகவும் கொள்கை பரப்புச் செயலராகவும் திகழ்ந்தார். நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வதை இந்து மத வைதீகம் என்று கருதிய சில்ர் பொட்டு இட்டுக் கொள்ள கூடாது என்று வற்புறுத்தினர் . அதனை எதிர்த்து, பொட்டு இந்த மத சின்னமல்ல ; பொட்டு இந்துமத சின்னமானால் தாலி இழந்து நிற்கும் கைம்பெண்கள் பொட்டை இழப்பதன் மூலம் அவர்கள் இந்து அல்ல எனச் சொல்லிவிடமுடியாது. மாறாக, கணவனை இழந்த பின்னர்தான் கடவுளை அதிகமாக வழிபடுகின்றார்கள். ஆகவே பெண்கள் நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ளவது அழகைப் பெருக்குவதற்றகுத் தனே தவிர ஆத்திக்க வழியில் தீவிரம் நாட்டவதற்கல்ல என்னும் கருத்தை துணிந்து வலியுறுத்தினார்.



சட்ட மன்ற, மேலவை, தில்லி மாநிலங்கள் அவை போன்றவற்றில் உறுப்பினராக விளங்கினார். சட்டமன்றத்தில் முதுகுளத்தூர் கலவரம் குறித்து இவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகும். ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இருந்த பொழுது தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பினை நிறுவினார். வேளாண்மை துறை அமைச்சராக இருந்த பொழுது பசுமை புரட்சியை உண்டாக்கினார்.



சரசுவதி சுப்பையா



வேலூர் மாவட்டத்தில் 1924 இல் தோன்றி, புதுவை மருமகளாக 1943 இல் அடியெடுத்து வைத்த காலம் தொட்டு புதுச்சேரியின் விடுதலைக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பொது வாழ்க்கையில் தம்மை அர்பணித்துக்கொண்டவர் சரசுவதி அம்மையார். 1946 இல் புதுச்சேரியில் நடைபெற்ற மாதர் முதல் மாநாட்டில் வீட்டுக்குளிருக்கும் அடிமைத்தனம், நாட்டுக்குள் இருக்கும் அடிமைத்தனம் அனைத்தையும் உடைத்தெறிந்துவிட்டுப் பரிபூரண சுதந்திரத்தை நாட்டுவதுதான் இங்கே கூடியுள்ள பெண்களின் இலட்சியம். இச்சுதந்திரத்தைப் பெறுவதற்கு எல்லாத் தரப்பட்ட பெண்களும் ஒன்றுபட்டு ஓர் இயக்கத்தை நடத்துவதற்றகுப் பிரெஞ்சிந்திய மாதர் சங்கத்தை அமைத்துள்ளோம். அதன் முக்கியக் குறிக்கோள் தேசத்தின் சுதந்திரம், அதனோடு ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானமாகச் சம உரிமையுடன், சம தர்மத்துடன் வாழக்கூடிய ஒரு புதிய சுதந்திரச் சமூதாயத்தை அமைப்பதாகும். அந்தச் சமுதாயத்தில் ஆண்களைப் பெண்கள் அடிமைப்படுத்துவதோ பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்துவதோ கிடையாது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று அந்த புதிய சமுதாயத்தில் சொல்ல முடியாது என்று வீரமுழக்க்கமிட்டார். இதனைத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினார். அவரின் இறுதி காலம் வரை(2005) பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராடியதோடு, இலவச சட்ட உதவி மையம், குடும்ப நீதிமன்றம் போன்ற அமைப்புகளின் மூலம் பல வழக்குகளை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்க உதவினார். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கோரி டெல்லி பாராளுமன்றம் முன்பு ஆர்பாடத்தில் கலந்துகொண்டார். பெண்கள் முன்னேற்றத்தையே தனது வாழ்க்கை இலட்ச்சியமாக கொண்டு செயல்பட்டார்.


பார்வதி கிருஷ்ணன்


திருச்சங்கோடு குமாரமங்கலம் என்ன்றும் பகுதியில் பிறந்த பார்வதி கிருஷ்ணன் அம்மையார் சுதந்தரத்திற்கு முன் ஆக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பயின்றவர்.கம்யூனிஸ்ட கட்சியின் மீது ஈடுபாடுகொண்டு அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டார். போராட்டங்களில் கலந்து கொண்டு பல முறை கைதாகியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், இவருக்கு அக்கட்சி தலைவர்கள் எழுதிக்கொடுக்கும் கடிதத்தை உரியவரிடம் கொண்டு பட்டுவாடா செய்வதும், முக்கிய தலைவர்களை ஓர் ஊரிலிருந்து இன்னொருக்கு ஊருக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லும் பணியும் கொடுத்தது. அப்பணி அனைத்தையும் அவர் திறம்பட மேற்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது மொரார்ஜி தேசாய் காந்தி ஜெயந்தியின் போது காந்தி சமாதியில் பெண்களைப் பற்றி தாழ்வாக பேச, அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்னும் விணப்பத்தைக் கோர உடனே மொராஜியும் வருத்தம் தெரிவித்தார். சாதி,சமயம், மதம் கடந்த அரசில் சூழல் உருவாக வேண்டும் என்பது அவர் விருப்பம்.



இராணி நல்லதம்பி



திருநெல்வேலி தென் பகுதியில் ஆனைகுடி என்னும் ஊரில் 1946 ஆம் ஆண்டு பிறந்த இராணி நல்லதம்பி அம்மையார் அரசியல், சமூகம், பெண்கள் முன்னேற்றம் எனத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தீவிர காங்கிரஸ் இயக்க தொண்டராக சட்டமன்ற உறுப்பினராக விளங்கியவர். இருமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். சட்டமன்றத்திருக்கு அரசு வாகனங்களில் மட்டுமே சென்றார். தனக்கெனத் தனியாக வீடு கட்டிக்கொள்ளாமல் தன் கணவனின் பூர்வீக வீடான சிறு ஓட்டு வீட்டிலே இறுதிவரை இருந்தார். இவரின் சட்டமன்ற பேச்சையும் போராட்டங்களையும் அறிந்த கலைஞர் தம் கட்சிப் பெண் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து இரமணி நல்லதம்பி போன்று உரையாற்றவும் செயலாற்றவும் வேண்டும் என்று ஆலோசனை வழங்குவது உண்டாம்.



லீலாவதி



சொளாஷ்டிரா சமூகத்தில் மதுரை பகுதியில் 1957 இல் வறுமையான குடும்ப பிண்ணனியில் தோன்றியவர் லீலாவதி அம்மையார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி மதுரை மாவட்ட குழு உறுப்பினராகவும், இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில உறுப்பினராகவும் மாவட்ட பொருளராகவும் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட மாநில உறுப்பினராகவும், கைத்தறி நெசவு தொழிளாளர் சம்மேளன மாநிலத்துணைத் தலைவர், மாவட்ட மாநில உறுப்பினராகவும், மதுரை மாநகராட்சி மார்க்சிஸ்ட் கொறடாவாகவும் விளங்கினார். இவர் தேர்தலில் போட்டியிடும் பொழுது பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,



நான் தேர்தலில் போட்டியிடுவது சம்பாதிப்பதற்றகாக இல்லை, மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகத் தான், வில்லாபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பாக லாரியில் விநியோகிக்கப்படும் குடி தண்ணீர் கூவி விலைக்கு விற்றகப்படுகிறது. இந்த அவலத்தைப் போக்கிக் குழாய் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன். இந்தப் பகுதியில் மேல்நிலைத் தொட்டி கட்டிப் பயன்படுத்துவேன். ரேசன் கடைகளில் சமூக விரோதிகள், அரசியல் கட்சியினரின் தலையீடு இருந்து வருகிறது. இந்தத் தலையீட்டைத் தடுத்து நிறுத்தி எடை குறையாமல் பொதுமக்களுக்குப் பொருட்கள் கிடைக்கப்பாடுபடுவேன். இந்தப் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகம் உள்ளது. இதை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதனை செயல்படுத்த முனைந்து அப்பகுதிக்கு குடிநீர் அமைக்கும் பணியைத் தீவிரப்படுத்தினார் அதனைப் பொறுக்க முடியாத தண்ணீர் விற்று கொள்ளை அடித்த சமூக விரோத கூட்டம் அவரை 1997 ஏப்ரல் 23 காலை வெட்டிக் கொன்றது.



அரசியலில் பல பெண்கள் இன்று ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த சிலரை மட்டும் இங்கே சுட்டிக்காட்டபட்டுள்ளது. பொது வாழ்க்கைக்கும் அரசியல் வெளிக்கும் பெண்கள் வரவேண்டும், ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்கும் கடமை அவர்களுக்கு உண்டு என்பதை மனதில் இருத்தி செயல்படவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்