அந்தமான்.........


அந்தமான் சென்று வந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது .அந்தமான் பயண அனுபவத்தை உடனே எழுத வேண்டும் என்று எண்ணினேன் நேரம் வாய்க்கவில்லை.இப்பொழுது நேரம் கிடைத்து உங்களுடன் என் பயண அனுபவத்தைப் பகிர்ந்தகொள்ளலாம் என்று எண்ணுகின்றேன்.

அக்டோபர் மத்தியில் விடுமுறைநாளின் மதியநேரத்தில் அலைபேசியில் ஒரு அழைப்பு அந்தமான் வருகிறீர்களா என்று?ஏன் என்னு வினாவினேன் அந்தமானில் திருக்குறள் சிலைத்திறப்பு மற்றும் மாநாடு நடக்கவுள்ளது அதில் கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது ,ஆனால் கட்டுரை இரண்டு பக்க அளவில் ஒரே நாளில் கொடுக்கவேண்டும் என்று கூறினார். போய்வரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது(என்னிடம் கடவுச்சீட்டு கிடையாது இனிதான் எடுக்கவேண்டும்,அந்தமான் இந்தியாவின் ஒருபகுதி அதனால் அங்குச் செல்வதற்குக் கடவுசீட்டுத் தேவை இல்லை) சரி என்றேன்(என் கணவர் போய்வா என்று கூறுவார் என்ற நம்பிக்கையில் அவர் மறுக்க மாட்டார் என்பது வேறு,அவரிடமும் கேட்டனேன் அவரையும் அழைத்தேன் அவருக்கு வேலையிருந்ததால் நீ சென்று வா என்றார்) சரி வருகிறேன் என்று கூறிவிட்டு அருவினை என்ப உளவோ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினேன். துணைக்கு யாரை வேண்டும் என்றாலும் அழைத்து வரலாம் என்று கூறினார்கள் என்னுடைய அம்மாவையும் அழைத்துச் செல்ல்லாம் என்ற எண்ணம் ஏற்பட்டது .அம்மாவிடம் கேட்டேன் வருகிறேன் என்றார்கள். அந்தமான் சென்று திரும்ப ஒருவருக்கு 12500 என்று கூறினார்.இருவருக்கும் சேர்த்து 25000 ரூபாய் கொடுத்தேன்.அதனோடு புகைப்படமும் கேட்டிருந்தார்கள்.கொடுத்தேன்.என்னைப் போன்றே அண்ணாமலைப் பல்கைக்கழகத்தில் இருந்து 15க்கும் மேற்பட்ட பங்கேற்றபாளரைகளை மிக விரைவாக ஏற்பாடு செய்து, அவர்கையும் அந்தமான் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொள்ள செய்த பெருமை எங்கள் துறையைச் சார்ந்த பேரா.அரங்க.பாரியையே சாரும்(அவருக்கு எங்கள நன்றி)

அந்தமான் செல்வதற்கு ஏற்பாடு செய்த பிறகு நான் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுக்கு அனுப்பியிருந்த பேராய்வு திட்டத்தினை ஏற்றுக் கொண்டு,அதற்கு நேர்காணலில் பங்கேற்க டெல்லியில் இருந்து அழைப்பு வந்து விட்டது.


அந்தமானில் மாநாடு 6,7,8 மூன்று நாள்கள்.நான் டெல்லியில் நேர்காணலுக்குச் செல்வேண்டிய நாளோ நவம்பர் 8 என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை(அந்தமானை விட டெல்லி செல்வது தான் மிக இன்றியமையாதது) அந்தமான் செல்வதை விட்டு விடலாமா என்று எண்ணினேன்.என் கணவர் இல்லை நீ அந்தமான் சென்று விட்டு டெல்ல வந்து விடலாம் அதற்கான் ஏற்பாடுகளைச் செய்கின்றேன் என்றார்.ஒரே நாளில் அந்தமானில் இருந்து 7ஆம் தேதி 12.45 க்கு அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து பிறகு மீண்டும் சென்னையில் இருந்து அன்று மாலையே 6.45 டெல்லி கிளம்ப கூடிய விமானத்தில் சென்று விடலாம் என்று திட்டம் தீட்டி,அதற்கான பயண சீட்டையும் வாங்கிவிட்டார்.(சீட்டினை வாங்குவதற்கு மொழியியல் துறைப் பேராசிரியர் இராஜா உதவி செய்தார்கள்) நல்லவேளை 7ஆம் தேதி அந்தமானில் இருந்து சென்னை கிளம்பும் விமானத்தில் ஒரே ஒரு சீட்டு மட்டுமே இருந்து.(என் நல்ல நேரம் என்று எண்ணுகின்றேன்)


திட்டமிட்டப் படி 5ஆம் தேதி மதியம் 1.30 மணிக்குக் கிளம்பினோம்.(பேரா.அரங்க பாரி அவர்கள் இங்கிருந்து செல்வதற்கும்,இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்) 8 மணியளவில் சென்னையை அடைந்தோம்.அங்கு சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் இரவு உணவினை முடித்து விட்டு,விடியற்காலை 4.45 மணிக்கு விமானம் ஆகையால் அங்கே சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,சரியாக 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பி விமானநிலையத்தினை அடைந்தோம்.


அங்கு வி.ஜி.பி.குடும்பத்தினர்,ஐயா குமரி ஆனந்தன்,முன்னால் துணைவேந்தர் ஔவை நடராசன், மாநாட்டில் கலந்து கொள்ள கூடிய அனைத்து அன்பர்களும் இருந்தார்கள்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து 18 பேர் சென்றிருந்தோம். தமிழகத்தில் இருந்து 80 க்கும் மேற்பட்டவருகள் சென்றோம்.


மூன்று மணியளவில் எங்களை விமானநிலையத்தின் உள்ளே அனுமதித்தார்கள்.(நாம்மை உறுதி செய்தற்கு உரிய அடையாள அட்டையினை எடுத்துச் செல்லவேண்டும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அட்டை,அல்லது பணிப்புரியும் அடையாள அட்டை,மொத்தமான விமான சிட்டு எடுத்திருந்ததால்,நாங்கள் அங்கு சென்ற பிறகு எங்களுக்கு வழங்கினார்கள்) விமானநிலையத்தின் உள்ளே அவர்கள் விதிமுறைக்கு உட்பட்ட சடங்குகள் எல்லாம் முடிந்து) விமானநிலையத்தின் உள்ளே மறந்து
எதனையும் வாங்கி சாப்பிட்டு விடக்கூடாது வெளியில் விற்றபதைவிட விலை மூன்று நான்கு மடங்கு அதிகம் மட்டும் இல்லை சுவையும் இல்லை.(எங்களுடன் வந்தவர்கள் காபி குடிக்கலாம் என்று வாங்கினார்கள் 30 ரூபாய் நன்றாக இல்லை என்று கீழே கொட்டியது தான் மிச்சம்,நல்ல வேளை நாங்கள் தப்பித்தோம் என்று எண்ணிக்கொண்டோம் ,பொதுவாக எனக்குக் காப்பி குடிக்கும் பழக்கம் இல்லை) அங்கு ஒரு 1மணி நேரத்திற்கு மேல் காத்துக்கொண்டு இருந்தோம்.4.30 க்கு விமானத்தில் ஏறினோம்(king fisher) .4.45 க்கு விமானம் கிளம்பியது. சாரளத்தின் அருகே அமரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து.விடியற்காலை என்பதால் விமானம் ஏறும் போது ஒன்றும் தெரியவில்லை. விடிந்தவுடன் 6 மணிக்கு ஏதோ தேவலோகத்தில் சென்று கொண்டிருக்கின்றோமோ என்ற வியப்பு மேலிட்டது.மேகங்கள் சூழ்ந்து கொண்டு அப்பப்பா அதன் அழகை வருணிக்க வார்த்தைகளே இல்லை .அத்துணை அழகு.கைபுனைந்தியற்ற கவின் பெறு அழகு.எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதி பாடுவானே அப்படித்தான் தோன்றியது எனக்கு. மேகங்கள் ஒவ்வொரு கோலத்தினைக் காட்டி காட்டி மறைந்து கொண்டு இருந்தது.அதன் அழகில் மனதைப் பறிக்கொடுத்து ஒன்றி இருந்தவேளையில் ஞாயிறு கதிர் பரப்பத் தொடங்கினான். அதேவேளையில் அந்தாமானும் நெருங்கிவிட்டது . மேலிருந்து அந்தமானின் பசுமையான முகத்தினைக் கண்டு களித்தோம்.


அந்தமான் விமான நிலையம் வந்து அடைய 7 ஆகிவிட்டது. அந்தமான் விமான நிலையம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை (சிறி ஊர் என்பதாலோ,இல்லை இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதாலா) எங்கு காணினும் பசுமை பசுமை.நிலம் குன்றுகள் சூழ அமைந்திருந்து.நாங்கள் சென்றபோது மழை இல்லை . அவ்வளவாக குளிரும் இல்லை.அங்கிருந்து வி.ஜி.பி. நறுவன்த்தினரும் அந்தமான் தமிழ்ச் சங்கத்தினரும் ஏற்பாடு செய்திருந்த விடுதிக்குச் சென்றோம். விடுதி பரவாயில்லை. சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு கிளித்து முடித்து,காலை சிற்றுண்டி முடித்துவிட்டு,அங்கிருந்து கிளம்பி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள்.


இந்தியராய் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம். நம்முன்னோர் நம் நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பதற்காக என்னென்ன துயரங்களை அனுபவித்து இருக்கின்றார்கள் சொல்லி மாளாது. நேரில் சென்று பார்த்தால் தான் உணரமுடியும்.அங்கு அவர்கள் அனுபவித்த கொடுமைக்ள காட்சியாக வைக்கப்பெற்றுள்ளன. நெஞ்சம் நைந்நு வலியோடு சுற்றிப் பார்த்தோம்.சிறைச்சாலையின் மூன்றாவது மாடியில் இருந்து பார்த்தால் அந்தமான் தீவு முழுமையும் தெரிகின்றது.நல்ல காற்று அங்கிருந்து வரு மனதில்லை.அங்கு ஔவை நடராசன் ஐயா குமரி ஆனந்தன் ஐயா அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தோம்.பல செய்திகளைக் கூறினார்கள்.(குமரி ஐயா அந்தமானுக்கு முன்பு சென்னையில் இருந்து கிளம்பி கல்கத்தா சென்றுதான் வரவேண்டிய நிலை இருந்தது,சென்னையில் இருந்து நேராக அந்தமானுக்கு நேராக செல்வதற்கு அவர் காரணமாக இருந்த செய்தினைப் பகிருந்து கொண்டார்கள். சுதந்திர வீரங்களைப் பற்றிய நினைவுகளையும் பேசினார்கள்)

அங்கிருந்து கிளம்பி 120 அமரக்கூடிய படகில் ஒரு தீவுக்கு அழைத்துச் சென்றார்கள்.சிறிய தீவு அங்கு மக்கள் வசிக்கவில்லை.இராணுவம் அவ்விடத்தைப் பயனபடுத்துகின்றதாம்.

தொடரும்..............................

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்வுக்கு நன்றிங்க.. எனக்கும் அந்தமான் பார்க்க வெண்டும் என்ற ஆசை உண்டு வாய்க்குமா என்று தெரியவில்லை
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன் விரைவில் அந்தமான் செல்ல வாழ்த்துகள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்