ஏப்ரல் -29 என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்.இவ்வுலகிற்கு நான் வர காரணமாயிருந்த எந்தை எங்களை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற தினம் . எந்தையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாது. ஒவ்வொரு நொடியும் எங்களுக்காக வாழ்ந்தவர். எங்களுடைய நலனே அவருடைய நலனாகப் போற்றியவர்.நாங்கள் கிராமத்தில் பிறந்திருந்தாலும்,ஒரு முற்போக்கு சிந்தனையுடன் எங்களை வளர்த்தார்.ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதம் இல்லாமல்,குழந்தைகள் மூவரையும் முக்கண்ணாக வளர்த்து சான்றோர் ஆக்கினார்.
உணர்வுகளை மதிக்க கூடியவர் . யாரையும் புண்படுத்த தெரியாத பண்பட்ட மனிதர் . பழைமையில் வாழ்ந்த கிராமத்திற்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தவர்.இறை பற்று இல்லை என்றாலும், நீண்ட நாள்களாக கட்டப்படாமல் கிடந்த எங்களூர் கோவிலைக் கட்டவேண்டும் என்று முனைப்புடன் செயல் பட்டு கட்டிமுடித்தவர். பிறர் பசி கண்டு பொறுக்காதவர்.
எங்கள் வீட்டில் எப்பொழுதுமே ஒரு நான்கு பேர் சாப்பிட கூடிய அளவு உணவு இருந்து கொண்டே இருக்கும் . பசி என்று யார் வந்து கேட்டாலும் உடனே சாப்பிட சொல்லி விடுவார்.ஏழை செல்வந்தர் என்ற எந்த பாகுபாடும் அவரிடம் இருக்காது.அனைவரையும் ஒன்றாக காணும் பண்பாளர்.வயலில் வேலை நடக்கும் போது அவர்களுக்கு என்ன உணவு வழங்கப் படுகிறதோ அதையே தான் உண்பார்.ஏன் அவர்களுக்கு ஒன்று நமக்கு ஒன்று என்று கேட்பார்.
2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 இயற்கை எய்தினார்.இறக்கும் போது 49 வயது.அவர் மிக விரும்பிய வயலிலேயே அவரைப் புதைத்தோம்.ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் பூசை செய்வது வழக்கம்.எங்கள் தெருவில் உள்ள அனைவரும் அன்று கலந்துகொள்வார்கள்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்