காமம்

அதுகொல்?தோழி!காம நோயே,
வதிகுருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடைத்திரை திவலை அரும்பும் தீம்நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடுஒல் லாவே(குறுந்தொகை,5)

தன்னிடத்தே தங்கியிருக்கும் நாரைகள் உறங்கும் இனிய நிழலையுடைய புன்னை மரமானது, அலைவீசும் துளியால் அரும்புகின்ற இனிய நீர்ப்பரப்பையுடைய நெய்தல் தலைவன் பிரந்தானாக , தாமரை போன்ற கண்கள் இமை பொருந்தாவாயின்
(உறங்கவில்லை) அவ்வுறக்கமின்மைதான் காமநோயோ எனப் பிரிவில் கவலையோடு தலைவி தோழியிடம் கூறுகின்றாள்.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாம்மும் விடியலும் என்று இப்
பொழுதிடை தெரியின், பொய்யே காமம் (குறுந்தொகை,32)

காலை நண்பகல் பிரிந்த்தால் செயல்ற்று வருந்தும் மாலை,ஊரார் துயிலும் நள்ளிரவு, விடியற்காலம் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோன்றுமாயின்,அத்தைகையோரிடம் தோன்றும் காமம் உண்மையன்று; பொய்யேயாகும். பொழுதின் வேறுபாடு தெரியாது துய்ப்பது தான் காமம் என் மிகுத்துச் சொல்லியது.

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்
கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்,
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே (குறுந்தொகை,58)

கதிரவனின் வெயில் எறிக்கும் வெம்மையுடைய பாறையில் , கையில்லாத ஊமையன் தன் கண்களாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணெயைப் போல, என்பால் தோன்றிய காமநோய் பரவியது. அது பொறுத்துக் கொள்ள அரிதாயிருக்கிறது என இடித்துரைக்கும் பாங்கனுக்குத் தலைவன் கூறினான்.

அரும்பனி அச்சிரம் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லைஅவர் மணந்த மார்பே(குறுந்தொகை,68)

பொறுதற்கரிய பனியுடைய முன்பனிகாலத்தால் உண்டாகும் துன்பந் தீர்க்கும் மருந்து, என்னை முயங்கிய தலைவருடைய்ய மார்பன்றி வேறொன்றில்லை.

நோதக் கன்றே காமம்; யாவதும்
நன்றுஎன உணரார் மாட்டும்,
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே(குறுந்தொகை,78)

காமம் சிறிதும் நன்மை தராது என உணராத அறிவில்லாதவரிடத்தும் சென்று தங்கும் பெரும் அறியாமையை உடையது, அது வெறுக்கத் தக்கது.

------------------பெருந்தோட் குறுமகள்
நீர்ஓர் அன்ன நாயல்
தீஓர் அன்னென் உரன் அவித் தன்றே (குறுந்தொகை,95)

தலைவியினது நீரைப் போன்ற மென்மை, தீயையொத்த எனது வலிமையைக் கெடுத்தது எனத் தலைவன் பாங்கனுக்கு உரைத்தான்.

உள்ளினும் உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே;
வான்தோய் வற்றே காமம்;Boldசான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே( குறுந்தொகை,102)

தலைவரை நினைத்தால் என் நெஞ்சம் வேகின்றது. நினையாது இருந்தால் இது என் ஆற்றல் அளவிற்கு உட்பட்டதன்று. காம நோய் எம்மை வருத்தி வானத்தை அளாவியது போன்ற பெருக்கம் உடையது. யாம் கூடி முயங்கிய தலைவர் பண்பு நிறைந்தவர் அல்லர்.

-----------------------சேவல்
நள்ளிருள் யாமத்து இல்எலி பார்க்கும்,
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி
கடுநவைப் படீஇயரோ! நீயே,நெடுநீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏமின்துயில் எடுப்பி யோயே(குறுந்தொகை,107)

சேவற்கோழியே! நீர்வளத்தால் உண்டாகும் புதுவருவாயையுடைய ஊர்க்குரிய தலைவனுடன் தங்கிய இன்பம் தரும் துயிலின்றும் விடியற் காலத்தும் எம்மை எழுப்பினாய்! செறிந்த இருளையுடைய நள்ளிரவில், வீட்டிலுள்ள எலிகளை உண்ணப் பார்க்கும் காட்டுப்பூனைக் குட்டிச் சிலநாளைக்கு வைத்துண்ணும் உணவாகிய நீ மிகுந்த துன்பத்தை அடைவாயாக! எனத் தோழி இன்பத் தடையாயிருந்த சேவலை நோக்கி சினந்து கூறினாள்.

கௌவை அஞ்சின்; காமம் எய்க்கும்;(குறுந்தொகை,112)

பிறர்கூறும் அலர் மொழிக்கு அஞ்சினால், காமம் நலிந்து மெலியும்.தலைவி கௌவையும் காமமும் ஒன்றுகொன்று முரணாக இருத்தலின் துனபமுற்றாள்.

கருத்துகள்

ஆரூரன் விசுவநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்ந்தமைக்கு நன்றிங்க. வாழ்த்துக்கள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஆரூரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்