வஞ்சினம்

பழந்தமிழரின் காதலையும் வீரத்தையும் பறைசாற்றுவன சங்க இலக்கியங்கள். சங்க மக்கள் வீரம் செறிந்தவர்களாக, பழிகண்டு நாணுபவர்களாக,பழியைப் போக்கிக் கொள்ள வஞ்சினம் கூறி அதனை நிறைவேற்றியுள்ளார்கள். காதலிலும் அதுபோன்றே நிகழ்ந்துள்ளது. (உண்மைதான் படித்துப் பாருங்களேன். இப்பொழுதும் தான் இருக்கின்றோமே)

பூதபாண்டியன் என்னும் மன்னன் பாண்டியருக்குரிய ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து வென்று கொண்ட சிறப்பால் ஒல்லையூர் பூதபாண்டியன் என்று சிறப்பிக்கப்பட்டான். அவன் மனைவி பெயர் பெருங்கோப் பெண்டு.இருவரும் புலமையில் வல்லவர்கள். ஒத்த கருத்துடைய இருவரும் அன்பெனும் பிடிக்குள் சிக்கி இனிய இல்லற வாழ்க்கையை மேற்கொண்டனர். ஒருமுறை சேர ,சோழ மன்னர்களுக்கும் இவனுக்கும் பகைமை உண்டாயிற்று. இரு வேந்தர்களும் ,பாண்டியனுடன் போரிட வந்தனர்.அதனை அறிந்து மிக்க சினமுற்ற பாண்டியன் அவ்விரு மன்னர்களையும் துன்புற்று வருந்தும் படி தாக்கி, தேரோடு புறங்காண ஓட வைப்பேன் .அப்படி செய்யேன் ஆயின் பெரிய மையுண்ட அழகான கண்களை உடைய என் துணைவியைப் பிரிவேனாக என்றும்,

ஆரமர் அலறத் தாக்கி தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின்,சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக.(புறநானூறு,71)


அறநெறி மாறாத அன்புடையோர்க்குரிய அவையில் தகுதியில்லாத ஒருவனை அமர்த்தி முறை கெட்டுக் கொடுங்கோல் செய்தேன் ஆகுக!
என்றும்,

அறநிலை திரியா அனபின் அவையத்துத்
திறன்இல் ஒருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக!(புறம்,71)


வையை வளம் அமைந்த ஊர்களில் தப்பாத வருவாய் உடைய மையல் என்னும் ஊரின் தலைவன் மாவன் என்பானும்,வலிய மதில் பெயருடைய எயில் என்னும் ஊரின் உள்ள ஆந்தை என்பானும், அந்துவன் சாத்தன், ஆதன்அழிசி, பெருஞ்சினமுடைய இயக்கன் என்பாரும் உட்பட்ட மற்றவரும் ஆகிய கண்ணைப் போன்ற நண்பர்களுடன் கலந்திருந்து பேசி மகிழ்ந்திருக்கும் அந்நாளையும் நான் இழந்தேன்` ஆவேன் என்றும் ,


வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பில்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும் மனெயில் ஆந்தையும்,உரைசால்
அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
கண்போல் நண்பின் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கியான் ஒன்றோ ?



சிறப்பும் வளமையும் கடமையும் நிறைந்த பாண்டிய குடியில் அரசாளும் நிலைப் பிறர்க்குரிய வளமற்ற நிலம் காக்கும் குடியில் பிறப்பேனாகுக.

மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரீஇப்பிறர்
வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே
.

என்றும் வஞ்சினம் கூறுகின்றான்.

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை இளையவன் என எள்ளி,அவனோடு போர்புரிந்து வெற்றியடையலாம் என எண்ணம் கொண்டு பகைவர்கள் போருக்கு அழைத்தனர். பகைவர்கள் இகழ்ந்துரைத்தைக் கேட்க பொறாத நெடுஞ்செழியன் சினத்தீ கிளர்த்தெழ , படையைத் திரட்டிக் கொண்டு போருக்குப் புறப்படுகின்றான் .அப்பொழுது என்னை இகழ்ந்தவர்களை வெல்லவில்லை என்றால் கல்வி கேள்விகளில் சிறந்த புலமைப் பெற்று திகழும் மாங்குடி மருதன் தலைவராக இருக்கக் கூடிய அவையில் உள்ள புலவர்கள் என்னுடைய புகழையும் நாட்டினுடைய சிறப்பினையும் பாடாது நீங்குவாராக என வஞ்சினம் கூறிப் போருக்கும் புறப்படுகின்றான்.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகென் நிலவரை (புறம்,72)


தலைவி ஒருவள் தலைவன் தன்னையே சுற்றி வருமாறு செய்வேன் எது போல என்றால் எப்படி சூரியன் திரும்பும் பக்கம் எல்லாம் நெருஞ்சிப்பூ சுழல்கின்றதோ அதுபோல என்கிறாள்.அவ்வாறு நான் செய்யவில்லை என்றால்வெற்றிப் பொருந்திய வேலினையும், மழைபோல மிகுந்த அம்பினையும், மேகத்தைப் போன்ற தோற்கிடுக்கினையும் உடைய சோழர்களது ,வல்வீரர்கள் திரண்டுள்ள அரணியையுடைய வல்லத்தின் புறத்தே உள்ள காவற் காட்டினிடத்தே வந்தடைந்த ஆரியர்களின் படையினைப் போல,என்னுடைய நேரிய சந்தினைக் கொண்ட முன்கையில் செறிந்துள்ள இவ்வளையல்கள் சிதைந்து ஒழிந்து போவன ஆகுக என வஞ்சினம் கூறுகின்றாள்.

சுதரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின் வென்வேல்
மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமினை
ஆரியர் படையின் உடைக என்
நேரிறை முன்கை வீங்கிய வளையே (அகம்,336)

கருத்துகள்

passerby இவ்வாறு கூறியுள்ளார்…
புறம் 71ஐப் பாடியவன் பூதப்பாண்டியனேதானா? பூதப்பாண்டியன் ஒரு புறநானூற்றூப்புலவந்தானா?

பாண்டிய நெடுஞ்செழியன் அப்படிப்பட்ட புலவன் எனப் படித்திருக்கிறேன். பூதப்பாண்டியனைப்பற்றி தெரியவில்லை.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
விளக்கங்கள் புரியும்படியாக இருந்தது...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
பாண்டியன் அறிவுடைநம்பி,பாண்டியன் ஆரியப்படை கடந்த செழியன்,பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற பாண்டிய மன்னர்களும் புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மன்னர்களும் புலவர்களாக விளங்கியதை அறுமையாக விளக்கிக் கூறினீர்கள். நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்