திருக்குறள் உரைமரபும் மு.வ உரையும்



 

புதிய வகையான இலக்கிய ஆக்கங்கள், சிந்தனைகள் மரபிலக்கியங்களைப் பதிப்பிக்கும் / ஆராயும் முயற்சிகள் , தமிழ் தேசிய இலக்கியங்கள் கட்டமைக்கும் போக்கு / தனித்தமிழ் இயக்கங்கள் என இயங்கி வந்த மறுமலர்ச்சி காலகட்டத்தில் கல்வியாளராக அறிமுகமாகும் மு.வ அவர்கள், பல்வேறு இலக்கிய வகைசார் இயங்கியலில், புலவர் மரபில் ஊடாடிக் கிடந்த திருக்குறளை வணிக/பொதுஜன தளத்திற்கு நகர்த்தும் பணி குறிப்படத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் இடை காலங்களில் திருமண விழாக்களில் பரிசளிக்க கூடிய நூலாக அவருடைய திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலும், சைவச்சித்தாந்தம் வெளியிட்ட கையடக்க திருக்குறள் தெளிவுரையும் இடம்பெற்றதோடு, திருக்குறள் தெளிவுரை பல இலட்சம் படிகள் விற்று தீர்ந்து மீள பல பதிப்புகள் கண்டது/ காண்கிறது. இவருக்கு முன் திருக்குறளுக்குப் பல உரைகள் தோன்றியுள்ள நிலையில் மு.வ உரை விதந்து பேசப்பட்டு விற்கப்பட்டத்திற்கான காரணங்கள், திருக்குறள் உரைமரபில் இவருரை பெறும் இடம் ஆகியன குறித்த உரையாடலாக  இக்கட்டுரை அமைகின்றது .

சுதந்திரத்திற்கு முன் எழுத தொடங்கும் மு.வ 1939 இல் குழந்தைகள் பாட்டு என்னும் சிறுவர்களுக்கான இலக்கியெழுதுகையிலிருந்து படைப்பாக்கவெளியைத் தொடங்குகிறார். நவீன எழுத்து / இலக்கிய வகைகள் தோன்ற தொடங்கிய காலகட்டத்தில் மரபு, புதிய கவிதைகளை விடுத்து உரைநடை புனைகதை ஆக்கங்களான சிறுகதை , புதினம் போன்றவற்றைத் தேர்ந்தும், இலக்கிய ஆய்வுகள் சார்ந்தும் இயக்கம்கொள்கிறார். ஆனாலும்மு.வ. முதலில் கவிதை எழுதுவதற்கான முயற்சி மேற்கொண்டுள்ளார் அதற்கு அவ்வளவாக வரவேற்பில்லை என உணர்ந்தும், உரைநடைப் பக்கம் திரும்பி விட்டார் என எழுதும் மின்னூர் சீனிவாசன்,

இந்தப்பக்கம் பார்த்தேன்; பாரதி தேவையானதெல்லாம் சொல்லியிருக்கிறார்; அந்தப் பக்கம் பார்த்தேன் பாரதிதாசன் தகதகவென எழுதுகின்றார். இவர்களோடு நான் மோதிக்கொள்ள கூடாது என்று என்னுடைய வரம்பு தெரிந்து வசனத்துக்கு வந்துவிட்டேன் என்கிறார்(செந்தமிழ் செல்வி)  என்று கூறுகிறார்.

தமது எழுத்துக்களில் இலச்சிய மாந்தர்களை அவர்கள் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு முதன்மைக் கொடுத்தே கதை மாந்தர்களை வடித்துக்காட்டுகின்றார். தமது புனைவாக்கத்தில் திருக்குறள்  மேற்கோள்களையும் காந்தீயத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் கருத்தியல்வாதியாகவே செயல்படுகிறார். அவருடைய எழுத்துகள் குறித்து பல்வேறு முரண்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், ‘அதிகம் கற்றவர்களும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் விரும்புகிற ஒருநடையைக் கையாண்டார் என்று மா.ரா.போ.குருசாமி சொல்வதற்கு இணங்க எளிய நடையிலேயே திருக்குறளை அணுகுகிறார். மேலும்
அந்நாளில் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட எழுத்தாளர்கள் மு.வ.வின் நாவல்களில் தமிழ் நடைதான் இருக்கின்றது கதை இல்லை என்று குறை கூறினார்கள். இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மு.வ. அரிய இலக்கியங்களைப் படைத்தார் என்கிறார் கண முத்தையா(செந்தமிழ் செல்வி) குறிப்படுகின்றார்.


இந்நிலையில் சைவசித்தாந்த பதிப்பகத்துடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய உறவின் காரணமாக 1949 இல் திருக்குறள் மூலம் ஒரு பக்கமும் எதிர் பக்கத்தில் தெளிவுரையும் எனக் கையடக்கப் பதிப்பாக வெளிவந்தது. அக்காலச் சூழலில் சைவசித்தாந்தம் வெளியிடும் நூல்கள் கவனம் பெற்றதாலும், கையடக்க பதிப்பாகவும், யாரும் படித்துப் புரிந்துகொள்ளகூடிய எளிய நடையில் திருக்குறள் தெளிவுரை அமைந்திருந்த்தாலும், பல இலட்சம் பிரதிகள் விற்று தீர்ந்து மீண்டும் மீண்டும் பல பதிப்புகளைக் கண்டது. எழுத்தை வணிகமாக்கி சம்பாதிக்கிறார் என்ற விமர்சனம் வந்தபோது,  

மு.வ. எழுதி சம்பாதித்த்தை பொறுக்க மாட்டாமல் சிலர் பேசுவதைக் குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார். சென்ற வாரம் வரை பெயர் தெரியாமல் இருந்த நடிகரோ நடிகையோ திடீரென்று இன்று இலட்சக்கணக்கில் உரிமை உடையவராக மாறும்போது, அதைப் பொறுத்துக்கொள்ளுகிறது ஒரு சமுதாயம், எழுதியே சம்பாதிக்கும் ஒருவரை  ஏன் ஏற்றுக்கொள்ளத் தடையாக இருக்கிறது(செந்தமிழ் செல்வி)

என்று ஆதங்கப்படுகிறார். இவரது எழுத்துகள் வணிக அடிப்படையில் வெற்றிபெற்ற நிலையில் பின்னால் வணிக இதழ்கள் இவருடைய நடையைப் பின்பற்ற தொடங்கியது என்பதும் குறிப்படத்தக்கது. இவருக்குப் பின் இவரைப் பின்பற்றி பல்வேறு கையடக்கப்பிரதிகள் திருக்குறளுக்கு உருவாகியிருந்தாலும், மு.வ.வின் திருக்குறள் தெளிவுரை வணிக நிலையில் வெற்றி அடைந்த அளவு பிற கையடக்க உரைகள் வெற்றி பெறவில்லை, என்பதற்கான காரணத்தைப்  பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

1.        திருக்குறளை அவர் அணுகிய எளிய,தெளிவான நடை.

2.        அக்காலச் சூழலில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா அவர்களுடன் இருந்த நெங்கிய உறவு, சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் மீது  சமூகம் கொண்டிருந்த  நன்மதிப்பு.

3.        கேளிக்கை எழுத்துகள் மீதிருந்த நாட்டம் சமூகவெளியில் குறையத்தொடங்குதல், அவ்விடைவெளியை நிரப்பும் பொருட்டு  சமூக சீர்திருத்தம், பெண் சுதந்திரம், தனிமனித அறம், பொது குடிமைப்பண்பு போன்றவை தொடர்பான எழுத்துகள் தோற்றம் கொள்ளுதல், மு.வ அது சார்ந்து திருக்குறளை முன்னெடுத்தல்.
4.        திருமணம் மற்றும் பொது விழாக்களுக்குத் திருக்குறளைப் பரிசாக கொடுக்க முனைந்த திருக்குறள் இயக்கங்களுக்கு மு.வ. உரை எல்லாருக்குமானதாக அமைந்திருந்தது.

5.        பிற கையடக்கப்பிரதிகள் போல செய்த்து போல அவருடைய நடையைத் தழுவி எழுதப்பட்டமையால் பிற கையடக்கப் பிரதிகள் வணிக நிலையில் வெற்றிபெறவில்லை. தமிழாசிரியர்கள், திருக்குறளைப் படித்தவர் அனைவரும் ஒரு உரை எழுதி வெளியிடவேண்டும் என்னும் முனைப்பிலும் பல உரைகள் எழுந்தன. ஆனால் மு.வ. உரை அடைந்த அளவுக்குப் பிற உரைகள் பொதுவெளியிக்குச் சென்றடையவில்லை

6.        மு.வ.வின் பிற படைப்புகளின் மீது இலக்கியவாதிகளின் விமர்சனங்கள் இருந்தாலும், குறள் சார்ந்து எழுத்துகளை அதிகம் விமர்சிக்கவில்லை.

1948 இல் பொதிகைப் பதிப்பகம், கடலூரிலிருந்து திருவள்ளுவர் அல்லது வாழக்கை விளக்கம் என்னும் நூல் வெளிவருகிறது, 1949 இல் சைவசித்தாந்த நூற் பதிப்பகத்தின் வழி திருக்குறள் தெளிவுரையும், 1968 இல் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையிலிருந்து குறள் காட்டும் காதலர் என்னும் நூலும் திருக்குறள் தொடர்பாக எழுதியுள்ளார். தனிநூலாக மட்டுமில்லாமல் அவருடைய படைப்புகள் அனைத்திலும் வள்ளுவத்தை அடிப்படையாகக் கொள்கிறார். புதினங்களில் வாழ்வியல் நெறிநூலாக திருக்குறளைப் பின்பற்றவேண்டும் என கதைப்போக்கிலேயே கூறி செல்வதையும் அதற்கு விளக்கமாக கதைகள் அமைந்திருப்பது அவருடைய புதினங்களை வாசிக்கும் போது உணரமுடியும்.  இதில் குறள் காட்டும் காதலர் நூல் என் பார்வைக்குக் கிடைக்கவில்லை, கிடைத்துள்ள திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலுக்கு திரு.வி.க. அவர்கள் முன்னுரை வழங்கியுள்ளார்கள். அதில்,  
வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந்தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சின்றும் அரும்பும் கருத்து சிந்தனைக்குரியது என்று,

திருக்குறளோடு மு.வ கொண்டிருந்த அதீத உறவினை திரு.வி.க எடுத்துக்காட்டுவதற்கிணங்க, மூன்று அதிகாரங்களையும் அவரது காலச்சூழலுக்கு, உலகியலுக்கு ஏற்ப பொருத்தியும் விளக்கியும் அந்நூலை உருவாக்கியுள்ளார்.

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூலை காமத்துப் பாலில் இருந்தே தொடங்குகின்றார். அடிப்படை வாழ்க்கைக்கு இல்லற இணைகள் இருவரும் கருத்தொருமித்து அன்புபூண்டு வாழும் வாழ்க்கையே அனைத்திற்கும் அடிப்படையாகிறது என்ற கருத்தியலை முன் வைத்து காமத்துப்பாலை முற்கூறுகிறார்.

இன்று மக்கள் உடம்புகள் கோடிக்கணக்காகப் பெருகியுள்ளன; ஆனால் மக்கள் உணர்வு பெருகவில்லை. வேறு வகையாகக் கூறினால், மக்களாகத் தோன்றுவோரின் தொகை பெருகியுள்ளதே அல்லாமல், மக்களாய் வாழ்வோரின் தொகை பெருகவில்லை. அதனால்தான் உலகத்தில் குழப்பமும் கோளாறும் பூசலும் போரும் இன்றும் ஓயவில்லை. இன்பமும் அன்பும் அமைதியும் அறமும் இன்றும் அரும்பொருளாகவே உள்ளன.(திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பக்.27)

தியாகம் இல்லாதவர் கணவன் மனைவி எனக் கூடி நடத்தும் வாழ்க்கை காமமே அன்றி காதல் என்று கூறமுடியாது. கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் தன்னலம் இழந்து வாழும் வாழ்க்கையே காதல் என்பது.( திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்,46)


அதன் தொடர்ச்சியாக பொருட்பால் கருத்துகளோடு காந்தீய சிந்தனைகளை இணைத்து பொருள் காண்கிறார். அறத்துபாலை இறுதியில் எடுத்துக்கொள்ளுகிறார். திருக்குறளுக்கு வளமான உரைமரபு உண்டு, மரபுரை என்று கூறக்கூடிய பதின்மர் உரைகளுள் கிடைத்த ஐந்து உரைகள் வைதிகமல்லாத அறப்பிரதியை வைதிகம் சார்ந்த உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளதையும், தாம் சார்ந்த சமய நிறுவன பிரதியாக மாற்ற முயன்றுள்ளதையும் அறியலாம். அதன் பிறகு  எழுந்த பல உரைகளும்  ஏதோ ஒரு வகையில் தாங்கள் சார்ந்த இயக்க கோட்பாட்டை உட்செறித்து அதன் வழி குறளைக் காண முயன்றுள்ளன. இப்பிண்ணனியில் மு.வ. அவர்களின் உரையை அணுகும் போது. இவர் வைதிகப் பின்னணியுடன் குறளை அணுகவில்லை, கடவுள் இறைவன் என்று பொதுப்படவே கூறிச் செல்லும் நிலையினைக் காணமுடிகின்றது.

திருக்குறள் உரைவேற்றுமை நூலாசிரியர் இரா.சாரங்கபாணி அவர்கள் அறத்துபாலில் ஏழு குறள்கள், பொருட்பாலில் பதினொரு குறள்கள், காமத்துப்பாலில் இரண்டு குறள்கள் என மு.வ. அவர்களின் குறளுரையின் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றார். நுண்ணிய நூல் பல கற்பினும்(373) என்னும் குறளில் உண்மை அறிவு என்பதற்குப் பரிமேலழகர் கூறும் பேதமை உணர்வு பொருத்தமில்லை எனக்கூறி, மணக்குடவர் கொள்ளும் இயல்பாகிய உரை பொருந்தும் என்றும் அவரைத் தொடர்ந்து மு.வ கூறும் ஊழிற்கு ஏற்றவாறு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும் என்பதை எடுத்துக்காட்டுகிறார். வரைவிலா மாணிழையார் (919) இக்குறளில் புரையிலா என்பதற்கு வேறு குற்றமில்லா என்று பொருள் கொள்ளுதல் நெறியன்று. மேலும், இவ்விடத்துப் புரை என்பதற்குக் குற்றம் என்றுபொருள் காணலும் பொருத்தமில்லை. புரை உயர்வாகும் என்றாங்கு புரையில் – உயர் வில்லாத எனக்கொண்ட மு.வ.உரை நேரிது என எடுத்துக்காட்டுகிறார். நோக்கினாள்(1082) என்னும் குறளுரை நோக்கு என்பது தலைவி மேற்றாகவும், எதிர்நோக்குதல் என்பது தலைவன் மேற்றாகவும் மு.வ.உரையில் காணப்படும்.இது பொருந்துமாறு இல்லை என உரைக்கிறார்.

உரைவேற்றுமையில் மு.வ.வின் உரைகள் எடுத்துக்காட்டப்பட்ட நிலையில் பெரும்பாண்மை பழைய உரை மரபினை உள்வாங்கி செயல்பட்டும், சில இடங்களில் காலத்திக்கு ஏற்றார்போல் உரைகூறியும் ,முன்னுள்ள உரைகளை எளிமை வடிவமாக மு.வ. தந்துள்ளதையும் உணரமுடிகிறது.  அனைவருக்கும் புரிந்துகொள்ளகூடிய எளிய வடிவில் குறளுரையை வழங்கியதால் பொதுஜன/ வாணிக நிலையில் அவருடைய தெளிவுரை வெற்றிப்பெற்றது எனக் கொள்ளலாம்.



1.  

கருத்துகள்

மோ.சி. பாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மு. வ. அவர்களின் உரை வெற்றி பெற்ற காரணங்களை அறிந்துகொண்டேன். தகவல்களுக்கு மிக்க நன்றி. நீங்களும் எளிய நடையில் எழுதியிருக்கலாம் - இன்றைய வாசகர்களுக்காக என்பது என் எண்ணம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்