தினமணியில்....

வலையுலகப் படைப்பாளிகள்!

எம். மணிகண்டன்First Published : 01 Jan 2010 12:12:00 AM IST

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.
இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.
உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.
தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.
நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.
நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.
வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.
÷இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.//

மகிழ்ச்சியாகவுள்ளது.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
மகிழ்ச்சி குணா....
mohamedali jinnah இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://nidurseasons.com/?p=1559
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நீடூர்....
செ.சரவணக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி செல்வகுமார்....
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
In US the newspaper business was affected heavily by bloggers newsitems, It will happen in India too, Hence Dinamani realised and tries to have good relation with bloggers.

I hope your articles will soon come in Dinamani, Dinamalar, Tandhi soon.
மகிழ்நன் இவ்வாறு கூறியுள்ளார்…
மகிழ்ச்சிக்குரிய செய்தி
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வலையை வாழ்த்திய தினமணிக்கும் வாழ்த்துப் பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குப்பன்....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க குமார் உங்கள் வருக்கைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கும் நன்றி....
சகோதரன் ஜெகதீஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்…
தவறான செயல்களுக்கு மட்டுமே இணையதளம் எனறு பெரிய பெரிய பத்திரிக்கைகளும், புத்தகங்களும் எழுதித் தள்ளுகின்ற வேளையிலும், நம்முடைய வலைப்பூக்களின் பெருமையை உணர்ந்தே செயல்படுகின்றன என்பதில் மகிழ்ச்சி!.

- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்