அந்தமான் -பகுதி 2

அச்சிறிய தீவில் முன்பு ஆங்கிலேயர்கள் நீர் சுத்திகரிப்பு செய்வதற்கும்,ஓய்வெடுப்பதற்கும் இராணுவங்களை அங்கு வைத்திருப்பதற்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.அந்த கட்டிடங்கள் எல்லாம் இடிந்து மரங்கள் வளரந்து காணப்பெறுகின்றன.அங்கு ஒரு கிருத்துவ ஆலயமும் இருக்கின்றது.மான்கள் நிறைய காணப்பட்டன. அத்தீவில் இளநீர் குடித்தோம், இளநீர் நிறைய இருந்து. விலை 20 ரூபாய்.சுவை நன்றாக இருந்தது என்று சொல்லமுடியாது. அங்கு எங்களுக்குத் துணையாக வந்த அந்தமான் நண்பர் அத்தீவினைப் பற்றியும் அந்தமானைப் பற்றியும் விவரித்தார்.அந்தமான் விமானநிலையத்திற்குச் சுதந்திர போராட்ட வீரர் சவர்கரின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.அவர் அத்தீவில் பட்ட இன்னல்களை எடுத்துரைத்தார்.சுமார் 200 மேற்பட்ட தீவுக்ள அங்கு இருப்பதாகவும்,அதில் பழங்குடியினர் சில பகுதிகளில் வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும்,சில பழங்குடியினர் நாகரிக மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் ,இன்னும் சில பழங்குடியினர் மாறாமல்,நாகரிகத்தை வெறுப்பதாகவும்,வெளியாட்கள் யாரும் வருவதை அவர்கள் விரும்பாத செய்தியினையும் தெரிவித்தார்.

அங்கு ஆல்,தென்னை அதிகம்,வேறு சில மரங்ளும் காணப்பெற்றன.இராணுவம் பயன்படுத்துவதற்கு சில குடில்கள் அமைக்கப்பெற்றிருந்தன.வேறு ஒன்றும் சிறப்பாக அங்கு காணப்பெறவில்லை.
அங்கு ஒருமணிநேரம் சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்குப் போவதாக கூறினார்கள்.ஆனால் நேரம் அதற்கு இடம் கொடுக்காத காரணத்தால் நேராக தங்கிருந்த அறைக்குச் சென்று மதிய உணவினை உண்டு மாலை 3மணிவரை ஓய்வெடுத்தோம்.மாலை 4 மணிக்கு மேல் தொடக்கவிழாவிற்குச் செல்ல ஆயத்தமானோம். தொடக்கவிழாவில் திருக்குறளில் விஞ்சி நிற்பது தனிமனித ஒழுக்கமா? சமூக ஒழுக்கமா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடப்பதாக இருந்தது.அதில் என்னைத் திருக்குறளில் விஞ்சி நிற்பது தனிமனித ஒழுக்கமே! என்னும் தலைப்பில் பேச சொல்லி இருந்தார்கள்.
விழா தொடங்குவதற்கு மாலை 5.30 6 ஆகிவிட்டது. விழா குத்துவிளக்கு ஏற்றத்துடன் தொடங்கியது.குழந்தைகள் சிறந்த பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றினை வழங்கினார்கள். தொடர்ந்து,
அந்தமான் தமிழ் சங்கத்தார் ,அந்தமானில் தமிழை நிலைபெற செய்ய எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை எடுத்துரைதார்கள்.(தமிழனுக்கு எங்குமே போராட்டம்தான்) வி.ஜி.பி நிறுவன இளவல் வி.ஜி.செல்வராஜ் உரையாற்றினார்.அவர் தமிழைப் பற்றி பேசும்போது பிறமொழிகளில் உள்ள சொற்களை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும்.அப்பொழுதுத தான் தமிழ்மொழி வளரும்,தனிதமிழ் இயக்கங்கள் எல்லாம் தேவையில்லை என்ற கருத்தினைக் கூறினார்.(இதனைக் கூறும் போது எனக்கு உடனே பதில் கூறவேண்டும் என்ற எண்ணம் எழுந்து,நம்மிடம் இல்லை என்றால் கடன் வாங்கலாம் நம்மிடம் நிறைய செல்வங்கள் இருக்கின அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால் அச்சொற்கள் எல்லாம் விளிம்பு நிலையை நோக்கி அல்லவா நகரும்,அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரையில் தான் சூடான் சென்று இருந்ததாகவும்,சூடான் மொழி தெரியாததால் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு சென்றதாகவும்,ஆனால் அங்கோ புதிய புதிய வரவுகளுக்குக் கூட உடனே சூடான் மொழியில் மொழிபெய்ர்த்து அவர்கள் பயன்படுத்தியதை எண்ணி வியக்கின்றார்.அதே அவர் சென்னை வரும் போது உணவுவிடுதியில் உப்பு என்று கேட்கும் போது அந்த அச்சொல் அவர்களுக்கு தெரியவில்லை என்றும் சால்ட் என்ற சொன்னால் தான் புரிந்தது எனறும் குறிப்பிட்டுள்ளார்.இப்படியே சென்றால் உப்பு என்ற சொல்லையே நாம் இழந்துவிட மாட்டோமா?) அவர் கூறிய கருத்திற்கு அடுத்து பேசிய பேரா .உலநாயகி அவர்கள் தமிழின் நிலை தாழவில்லை என்று தெரிவித்தாலும்,ஔவை அவர்கள் கூறியது வலுவாக இருந்தது.தாய் பாலுக்கும் பாக்கெட் பாலுக்கும் வேறுபாடு உண்டு .தாய் பால் மருத்துவகுணமும் உடலுக்கு உறுதியும் கொடுப்பது,ஆனால் பாக்கெட் பால் அப்படி பட்டதல்ல.தாய்மொழி தாய்ப்பால் அதனை பருக அனைவரும் தயாராக இருக்க வேண்டுமே ஒழிய,பாக்கெட்பால் கவர்ச்சியாக இருந்தாலும் உடலுக்கு உகந்தல்ல என்ற கருத்து ஏற்புடையதே.
(புதிய புதிய வரவுகளுக்கு ஏற்ப தமிழில் சொற்களைத் தரப்படுத்துதல் வேண்டும்.அதுவும் பலர் பல இடங்களில் தரப்படுத்துதலை விடுத்து ஒரே இடத்தில் தரப்படுத்தி,அச்சொல்லை புழக்கத்தில் விட்டால் நன்றாக இருக்கும்)
ஐயா குமரி ஆனந்தன் அவர்கள் பேசினார்கள்.தமிழின் பெருமையை எடுத்துரைத்தார்.இறுதி வி.ஜி.சந்தோசம் அவர்கள் தாம் வாழ்வில் எப்படியெல்லாம் கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தோம் என்னதை அவருக்கே உரிய நடையில் அழகான தமிழில் பேசினார்.விழா முடிவதற்கே இரவு 8 க்கு மேல் ஆகிவிட்டதால் அன்று பட்டிமன்றம் நடக்கவில்லை. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பி இரவு உணவினை முடித்து விட்டு ஒய்வெடுக்க சென்றோம்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//(புதிய புதிய வரவுகளுக்கு ஏற்ப தமிழில் சொற்களைத் தரப்படுத்துதல் வேண்டும்.அதுவும் பலர் பல இடங்களில் தரப்படுத்துதலை விடுத்து ஒரே இடத்தில் தரப்படுத்தி,அச்சொல்லை புழக்கத்தில் விட்டால் நன்றாக இருக்கும்)//

உண்மை.. அதில் இணையம் சிறிது செய்துக்கொண்டுள்ளது பாராட்டபட வேண்டிய விடயம்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான் சேகரன் இன்னும் செய்யவேண்டியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்