இந்திய தரத்திற்கு எழுதப்பட்டுள்ள நாவல் எனச் சா. கந்தசாமி அவர்களால் முன்மொழியப்பட்ட சி.எம். முத்துவின் மிராசு நாவல் தமிழ் புனைவாக்க வெளியில் ஒரு காத்திரமான படைப்பு. அவரின் அனைத்துப் படைப்புகளும் தமது சுய சாதிகுறித்து, இருந்தாலும் அதன் பெருமிதங்களை அல்ல அவற்றுள் இருக்க கூடிய உள் முரண்களை, சிடுக்குகளை அப்படமாக வெளிப்படுத்துபவை. மிராசு நாவல் இந்தியா சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்திலிருந்து தொடங்கி சமகாலம் வரை, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகாலம் ஒரு குடும்பத்தின், ஒரு ஊரின் அவர்கள் பார்வையில் தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றத்தைக் கவனப்படுத்துகிறது. கீழத் தஞ்சை கிராமத்தில் வாழ்ந்த சேது காளிங்கராய மிராசுவும் அவரைச் சுற்றியிருந்த மனிதர்களும் எவ்வித புனைவுகளும் அற்று அசலாக நம் கண்முன் நடமாடுகிறார்கள். இந்த நாவல் அநேக வகையான திருப்பங்களோ கற்பனைக்கும் எட்ட முடியாத மர்ம முடிச்சுகளோ நாயகன் நாயகி போன்ற சம்பிர்தாயமான பாத்திரங்களோ அடுக்கடுக்கான சம்பவங்களோ எதிர்ப்பார்ப்பை நோக்கிய நிகழ்வுகளோ கோர்வைகளோ ஏதுமற்ற நதி அதன் போக்கிற்கு ஓடுகிற மாதிரி நாவல் அதன் போக...